சோழவந்தான் அருகே, அரசு பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 10க்கும் மேற்பட்டோர் காயம் பட்டு சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைக்கப்பட்டனர். தற்காலிக பணியாளர் செல்போனில் பேசிக்கொண்டு பேருந்து ஒட்டியதாலும் ரோடு விரிவாக்க பணிகள் செய்யாததாலும் விபத்து நடந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இரும்பாடி செல்லும் பாதையில் முனியாண்டி கோவில் பகுதியில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கருப்பட்டி சென்ற 63 என் கொண்ட அரசு பேருந்தும் கருப்பட்டியிலிருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் சென்ற 29 கே என் கொண்ட அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி முன்பக்க கண்ணாடிகள் சுக்கு நூறாக நொறுங்கியது.
பேருந்தில் பயணம் செய்த பத்துக்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் .
இதுகுறித்து, அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில் பேருந்துகள் அனைத்தும் பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளதாகவும் பழுது அடைந்த பேருந்துகளை இயக்குவதாலும் அடிக்கடி விபத்து நடப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். சோழவந்தான் முதல் இரும்பாடி வரை உள்ள சாலையை அகலப்படுத்த வேண்டி பொதுமக்கள் பல தடவை அரசிடம் முறையிட்ட பின்பும் இதுவரை சாலையை அகலப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை போக்குவரத்துக் கழகத்திற்கு பணியாளர்களை நியமிக்காததால், தற்காலிக பணியாளர்கள் கொண்டு பேருந்து இயக்கி வரும் போக்குவரத்து கழகங்கள் தற்காலிக பணியாளர்கள் முறையாக பேருந்தை இயக்காமல் செல்போனில் பேசிக்கொண்டு பேருந்து இயக்குவதால் விபத்து நடந்ததாக பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.