• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தோகை விரித்து ஆடும் மயில்: கண்காணிப்பு கேமராவில் பதிவான அழகிய காட்சிகள்….

BySeenu

Jul 2, 2024

மயில் தோகை விரித்தாடும் அழகை எத்தனை நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். மேகங்கள் திரண்டு, மழை வரும் போது மட்டுமே, மயில்கள் தோகையை விரித்து ஆடுவது வழக்கம். பறந்து விரிந்த அதன் அழகிய தோகைகளை பார்க்கும் போது, அனைவரது கண்களையும் கவர்ந்து இழுக்கும்.

தேசியப் பறவையான மயில்களை பார்ப்பது தற்பொழுது அரிதாகிவிட்ட சூழலில், அவை தோகை விரித்தாடும் காட்சியை வீடியோக்களில் தான் பார்க்க முடிகிறது. அதுவும் நகர் புறத்தில் இருக்கும் மக்கள் மயில்களை குழந்தைகளுக்கு காட்ட வேண்டும் என்றால் உயிரியல் பூங்காவுக்கு தான் செல்ல வேண்டும்.

அங்கேயும் அவற்றை ரசித்து பார்ப்பது கொஞ்சம் கடினமான காரியம். நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவை தோகை விரித்தாடுவதை எப்போதாவது பார்க்கலாம். அதுவும் கூண்டுக்கு வெளியே இருந்து தான் பார்க்க முடியும்.

இந்நிலையில் கோவையில் கடந்த ஒரு வார காலமாக மழை பொழிந்து வருகின்றது. வெப்பம் தணிந்து குளுமையான சூழல் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த நிலையிலே, கோவை தொண்டாமுத்தூர், வேடப்பட்டி அருகே ஒரு வீட்டின் புல்வெளி பகுதியில் மயில் ஒன்று வந்தது. அந்த மயில் தோகை விரித்து ஆடியது. அந்த அழகிய காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. பொதுவாக மழை வரும் நேரத்தில் ஆண் மயில் தோகை விரித்து ஆடும் என்று சொல்வார்கள். அந்த வகையில், கோவையில் அவ்வப் போது மழை பொழியும் நிலையில், இந்த ஆண் மயில் தோகை விரித்து ஆடிய இந்தக் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் பதியப்பட்டு அதிகமாக வைரலாகி வருகிறது. தோகையை விரித்து மயில் நடனம் ஆடுவது காண்போரை கண் கவர செய்துள்ளது.