கோவை, கணுவாய் அருகே உணவைத் தேடி வீட்டின் முன்பகுதிக்கு வந்த காட்டு யானை ஒன்று, அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தைச் சினத்துடன் தள்ளி விட்டுச் சென்ற அசாத்திய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, தடாகம் தாரை மற்றும் கணுவாய் – பன்னிமடை சாலையில் பாலசுப்பிரமணியம் என்பவர் தோட்டம் உள்ளது. அங்கு பணி புரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர் குடும்பத்தினருடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார்.
வனப்பகுதியை ஒட்டி உள்ள இவரது தோட்டத்து வீட்டின் வளாகத்திற்குள், நள்ளிரவு வேளையில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று உணவைத் தேடி மெதுவாக நுழைந்து உள்ளது.

வீட்டின் முன்பகுதியில் ஏதேனும் சாப்பிடக் கிடைக்குமா ? எனத் தேடிப் பார்த்த யானைக்கு அங்கு எதுவும் கிடைக்கவில்லை.
சாப்பாடு எதுவும் கிடைக்காத விரக்தியில் இருந்த அந்த யானை, வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தைக் கண்டு, அதைத் தனது தும்பிக்கையால் ஓங்கித் தள்ளி கீழே சாய்த்தது.
”எங்கடா சாப்பாட காணோம்?” என்று தேடுவது போல, பைக்கைச் சாய்ச்சுப் போட்டு விட்டுச் சிறிதும் பதற்றமின்றி அங்கு இருந்து மெதுவாக நடந்து வனப்பகுதியை நோக்கிச் சென்றது.
யானை வீட்டின் முன்பகுதிக்குள் நுழைந்து, பைக்கைத் தள்ளிவிட்டுச் செல்லும் இந்த முழுச் சம்பவமும் அங்குப் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது.

தற்போது இந்தச் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பயனாளர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
கணுவாய், பன்னிமடை, தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவது அதிகரித்து வருவதால், வனத்துறையினர் இரவு நேரக் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.




