தென் தமிழகத்திலேயே வர்த்தகத்தில் நல்ல பொருளாதாரத்தை ஈட்டி வரும் விருதுநகர் மாவட்டத்தில் கடைகளே இல்லாத ஒரு கிராமம் இருக்கிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அந்தக் கிராமத்தைப் பற்றி இங்கு பார்ப்போம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பூசாரிப்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. விவசாயத்தையும், பட்டாசையும் பிரதான தொழிலாக கொண்டுள்ள இந்த கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் தான், 100 ஆண்டுகளாக கடைகள் இன்றி காணப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது இவ்வூரில் பீடி, சிகரெட் போன்ற பொருட்களின் பயன்பாடு இருக்க கூடாது என்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பாகவும் முன்னோர்கள் கடை வைக்க கூடாது என முடிவு செய்து அதை இன்றும் கடைபிடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இது பற்றி பூசாரிப்பட்டியை சேர்ந்த ஒருவரிடம் பேசிய போது, அவர் தெரிவித்ததாவது..,
”பீடி, சிகரெட் பயன்பாட்டை கட்டுப்படுத்த இன்று வரை கடைகள் வைக்கப்படாமல் உள்ளது. ஒரு வேளை கடை வைத்தால் பீடி, சிகரெட் வந்து விடும் என்பதால் இன்று வரை ஊருக்குள் அனுமதிக்காமல் இருக்கிறோம். கடைகள் இன்றி இருப்பது தங்களின் அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்த உதவுகிறது” என்றார்.
இன்று பெரும்பாலான மக்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வரும் நிலையில், தனது ஊர் மக்கள் பீடி, சிகரெட் பொருட்களுக்கு அடிமையாகி விடக் கூடாது என்பதற்காகவே ஒரு கிராமமே கடைகள் இன்றி இருப்பது தற்போதைய காலகட்ட மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கடையே இல்லாத கிராமம்
