• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவை மருதமலை அடிவாரத்தில் பெண் யானை மயக்கம்

BySeenu

May 31, 2024

கோவை மருதமலை அடிவாரத்துக்கு உட்பட்ட பகுதியில் பெண் யானை ஒன்று உடல்நல குறைவால் மயங்கிய நிலையில் கிடந்துள்ளது. மேலும், அந்த யானையின் குட்டியானை சத்தமிட்டு கொண்டே இருந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட வனத்துறையினர் இந்த யானையின் நிலையை கண்டறிந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் யானைக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினர்.

யானைக்கு நேற்று முழுவதும் குளுக்கோஸ் நீர் சத்து நிறைந்த உணவுகள் மருந்துகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இன்றும் அந்த சிகிச்சை நடைபெற்றது. யானைக்கு ஓரளவிற்கு உடல்நிலை தேறிய நிலையில் யானையை கிரைன் உதவியுடன் தூக்கி நிறுத்த மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் முடிவு செய்தனர். பின்னர் கிரைன் உதவியுடன் யானையை தூக்கி நிறுத்திய வனத்துறையினர் யானையின் மீது தண்ணீரை ஊற்றினர்.

பின்னர் அந்த குட்டி யானையை தாய் யானையிடம் விட்டவுடன் அந்த குட்டி யானை தாய் யானையுடன் வந்து சேர்ந்தது. பின்னர் குட்டி யானை பால் குடித்ததை தொடர்ந்து பெண் யானை உடல் நிலையை தேறி காணப்பட்டது. இருப்பினும் நடக்க முடியாமல் இருந்ததால் அந்த பெண் யானைக்கு உணவளிக்க வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய கோவை மாவட்ட கால்நடை மருத்துவர் சுகுமார், உடல் நலக்குறைவால் இருந்த அந்த பெண் யானை 40 வயது மதிக்கத்தக்கது எனவும் அதனுடன் இருந்தது மூன்று நான்கு மாதம் மதிக்கத்தக்க ஆண் குட்டியானை என தெரிவித்தார். ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் மற்றும் கோவை மாவட்ட வன அலுவலர் தலைமையில் கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்த அவர் யானைக்கு நேற்று 30 பாட்டில்கள் அளவிற்கு திரவங்கள் ரத்தம் வழியாக செலுத்தப்பட்டதாகவும் அதுமட்டுமின்றி எதிர்ப்பு சத்து பொருட்களும் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். நேற்றைய தினம் யானைக் கூட்டம் அந்த குட்டி யானையை அழைத்துச் சென்று விடும் என்று எண்ணிய நிலையில் அது நடைபெறாததால் இன்றும் குட்டி யானையை வைத்துக்கொண்டே அந்த பெண் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். இன்றைய தினமும் 30 பாட்டில் அளவிற்கு திரவங்கள் மற்றும் எதிர்ப்பு சத்து பொருட்கள் அளித்துள்ளதாக தெரிவித்தார். தற்போது கிரைன் மூலம் தூக்கி நிறுத்தியதை தொடர்ந்து அந்த யானை சற்று நிற்பதாகவும் குட்டி யானை அந்த தாய் யானையிடம் பால் குடித்து வருவதாகவும் தெரிவித்தார்.

சிகிச்சையின் முடிவில் அந்த தாய் யானை குட்டியானையை அழைத்துக் கொண்டு வனப்பகுதிக்குள் செல்ல வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு எனவும் ஆனால் தற்பொழுது அந்தப் பெண் யானைக்கு தசைகள் அனைத்தும் தளர்ந்து காணப்படுவதாகவும் எனவே அதனால் நடக்க முடியவில்லை என கூறினார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு நல்லது நடக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார். மேலும் யானைக்கு இளநீர் தர்பூசணி லாக்டோஜன் போன்றவை தொடர்ந்து அளித்து வருவதாக வருவதாகவும் தெரிவித்தார்.

தெர்மல் கேமரா மூலம் சோதனை செய்ததில் யானைக்கு உட்புறத்தில் காயங்கள் எதுவும் இல்லை எனவும் ரத்த பரிசோதனை செய்ததில் அதற்கு கல்லீரல் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டதாகவும் உடல் பலவீனம் காரணமாக படுத்து இருந்தது தெரியவந்துள்ளதாக கூறினார். இது போன்ற கல்லீரல் பாதிப்பு பல்வேறு காரணங்கள் ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டார்.

இந்த பகுதியில் அதிக பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாகவும் அதனை உட்கொண்டு வருவதாகவும் சில புகார்கள் எழுந்து வருவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், மாடுகளுக்கு பிளாஸ்டிக் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் யானையைப் பொறுத்தவரை எதை உட்கொண்டாலும் 55 சதவிகிதத்திற்கு மேல் ஜீரணமாகி சுமார் 40% வெளியேறும் எனவும் பிளாஸ்டிக் உட்கொண்டாலும் அது சாணம் வழியாக வெளியேறிவிடும் என தெரிவித்தார். இருப்பினும் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டால் தான் அது பற்றி முழு விவரங்களை தர முடியும் என தெரிவித்தார்.