கட்டிட வேலையின் போது குடிநீர் தொட்டியில் இறங்கிய 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கோவை, கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியில் புதிய வீடு கட்டிடப் பணிகள் நடைபெற்று வந்தது. அதில் கூலி தொழிலாளர்கள் 7 பேர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் அங்கு இருந்து தண்ணீர் தொட்டியில் இறங்கி வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென மயக்கம் அடைந்து தொட்டிக்குள் விழுந்து உள்ளார். இதனை பார்த்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மேஸ்திரி குமார் என்பவர் சத்தம் போட்டு படி சென்று உள்ளார். அவரும் மயக்கம் அடைந்து விழுந்து உள்ளார். இந்நிலையில் சக தொழிலாளர்கள் அவர்களின் உடல்களை மீட்டு இது குறித்து சரவணம்பட்டி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவங்கள் இடத்திற்கு வந்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தொட்டிக்குள் மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தனர் அல்லது மூச்சுக்காற்று குறைந்த காரணத்தால் உயிரிழந்தனரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னர் அவர்கள் உயிரிழந்ததற்கான காரணங்கள் தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.