• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மீனவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும். திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி உறுதி

பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும் என திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி தெரிவித்தார்.

திமுக கூட்டணியின் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி, இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணு சந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (திமுக) முருசேகசன் (திமுக), கருமாணிக்கம் (காங்கிரஸ்) ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்களிடம்நவாஸ் கனி பேசும்போது, திமுக அரசு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.2,818 கோடியில் புதிய காவிரி குடிநீர் திட்டம், இராமநாதபுரம் நகராட்சியை மாநகராட்சியாக்குவது, இராமநாதபுரத்திற்கு புதிய பேருந்து நிலையம், மீனவர்களுக்கான திட்டங்கள், சாலை வசதிகள் உள்ளிட்ட திட்டங்களை கூறியும், கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்தத்தை மக்களிடம் எடுத்துக் கூறியும் வாக்கு கேட்போம். தமிழக மீனவர்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இலங்கையில் மீனவர்களை கைது செய்தபோது, படகுடன் விடுவிப்பார்கள். ஆனால் தற்போது மீனவர்களை விடுதலை செய்துவிட்டு, படகை இலங்கை அரசு அரசுடமையாக்குகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. வரும் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும். மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை என தமிழக அரசின் திட்டங்களை கூறியே வாக்குகள் சேகரிப்போம். மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.