மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பண்ணிக்குண்டு கிராமத்தைச் சார்ந்த பச்சக்கா (வயது 38), இவரது கணவர் 13 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இந்நிலையில் பச்சக்காவுக்கு 18 வயதில் ஆண் மகனும், 15 வயதில் சிறுமியும் உள்ள நிலையில், பச்சக்கா யாரிடமோ தகாத உறவு வைத்துக் கொண்டு, கர்ப்பமானார். கிராமத்தில் உள்ளவர்கள் பச்சக்கா - வின் வயிறு பெரிதாக காணப்பட்டதால், அவரிடம் கேட்டபோது வயிற்றில் கட்டி இருப்பதாக கூறி கிராமத்தினரிடம் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த 15-ந் தேதி வயிற்றுவலி ஏற்பட்டு, வீட்டினுள் அவருக்கு ஆண் சிசு பிறந்தது . இதனை தொடர்ந்து பச்சக்கா வயிற்றுவலியால் முடியாததால் குழந்தையை வீட்டினுள் வைத்து விட்டு, சாத்தங்குடி அரசு மருத்துவமனையில் வயிற்று வலி குறித்து சிகிச்சைக்கு சென்றபோது, மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பச்சக்கா தனக்கு குழந்தை பிறந்ததாகவும் அந்த குழந்தை பிறந்த போது இறந்ததாகவும்,அதனை கண்மாயில் வைத்து புதைத்து விட்டதாகவும் முதலில் தெரிவித்து, பின்பு அக்குழந்தை தனது வீட்டிலேயே இறந்து கிடப்பதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, மருத்துவமனை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து , சிந்துபட்டி போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பச்சக்கா வீட்டுக்கு சென்று பார்த்தபோது, பிறந்த ஆண் சிசு இரும்பு தட்டில் இறந்த நிலையில் இரத்த கசிவுடனும், அதன்மேல் கயிற்றால் சுற்றப்பட்டு இருந்ததை கண்டனர். இதனால் ஆண் சிசு கொலை செய்யப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடனடியாக குழந்தை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையில் உள்ள பச்சக்கா - விடம் போலீசார் குழந்தை சாவில் உள்ள மர்மம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.