தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, தொடர் கனமழை காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது.
வைகை அணையில் முழு கொள்ளளவான 71 அடிக்கும் தண்ணீர் நிரம்பியது. தற்பொழுது, வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் உபரி நீர் வினாடிக்கு 3100 கன அடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
இதனால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கத்துக்கு மாறாக ஜனவரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும், நாளையும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை. விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.