தமிழகத்திலும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக மற்றும் ஆந்திராவிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகள் வேகமாக நிரம்பிவருகிறது. இதனால், அணையில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு உபரிநீரை வெளியேற்றும்படி உத்திரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஆழியார் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து காணப்படுவதால், அணையில் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் உபரிநீர் வெளியேற்றப்படலாம் என அப்பகுதி மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று மதியம் 3 மணி அளவில் ஆழியார் அணையில் இருந்து 2,265 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அப்பொழுது அணைக்கட்டு பகுதியில் குளித்துக் கொண்டிருந்த, இரு சுற்றுலாப்பயணிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். உடனடியாக அதே பகுதியை சேர்ந்த நாகேஷ் என்பவர் அவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டார்.
ஆழியார் அனை தொடர்ந்து நிரம்பி வருவதால் உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றபட்டு வருகிறது.. எச்சரிக்கையையும் மீறி சில சுற்றுலா பயணிகள் ஆற்றுக்குள் இறங்கி விபரீதம் அறியாமல் அலட்சியப்படுத்துவதால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.