குமரி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமான மார்த்தாண்டத்தில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்ளன. இங்கு போக்குவரத்து நெருக்கடி இருந்து வந்தது. இதற்கு தீர்வுகாணும் வகையில் பம்மத்தில் இருந்து வெட்டுமணி வரை 2½ கிலோ மீட்டர் நீளத்தில் மத்திய அமைச்சராக பொன். ராதாகிருஷ்ணன் இருந்த போது, 250 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 2016 ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பாலம் பணிகள் துவங்கிய நிலையில் 2018 ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாலம் திறக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த பாலத்தில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி கடிதம் எழுதி உள்ளார்.