காரின் டயர் வெடித்து 2 கார்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் மூன்று சிறுவர்கள் உட்பட 10 பேர் பலத்த காயமடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுப்புராஜ் காட்டன் மில் அருகே ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து விருதுநகரை நோக்கி சென்று கொண்டு இருந்த காரில் ராமகிருஷ்ணன் (53), சொக்கம்மாள் (52), ரமேஷ்பாபு (32) அர்சனா (21) சம்யூப்தா (2) வந்துள்ளனர். காரை ரமேஷ்பாபு என்பவர் ஓட்டி வந்துள்ளார். எதிரே மேல்மருவத்தூரில் இருந்து புளியங்குடி செல்வதற்கு வந்து கொண்டிருந்த காரில் முத்துவிநாயகமணி (45), மஞ்சு(40), சக்தி கார்த்திகேயன் (12), சக்தி யோகலட்சுமி(6) மற்றும் ஓட்டுநர் சுந்தர் ( 28 ) 5 பேர் வந்து கொண்டு இருந்தபோது இவர்களின் காரின் டயர் வெடித்து 2 கார்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் மூன்று சிறுவர்கள் உட்பட 10 பேர் பலத்த காயமடைந்தனர்.
அனைவரையும் அருகே உள்ளவர்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அனைவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விருதுநகரை சேர்ந்த சொக்கம்மாள் என்பவர் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 9 பேர் மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கிருஷ்ணன்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.