கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட வகைகளில் இட்லி கண்காட்சி நடைபெற்றது அனைவரையும் கவர்ந்துள்ளது.
கோவை சுங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் இட்லி கண்காட்சி நடைபெற்றது. கோவை மல்லிப்பூ இட்லி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சிறு தானியங்கள், காய்கறிகளை கொண்டு 500 வகைகளில் இட்லிகளைத் தயாரித்து காட்சிப்படுத்தினர். இந்த கண்காட்சியில் மீன் வடிவிலும், கரடி, பொம்மைகள், பட்டாம்பூச்சி, இசைக்கருவிகள், ஹார்டின் வடிவங்களிலும் இட்லிகள் தயரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இதுகுறித்து கோவை மல்லிப்பூ இட்லி நிறுவனத்தை சேர்ந்த இனியவன் தெரிவித்ததாவது..,
கடந்த 25 ஆண்டுகளாக இட்லி தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இட்லி ஒரே வடிவத்தில் இருப்பதால் அதனை மாற்றி குழந்தைகளுக்கு பிடித்தது போலவும், சத்தான தானியங்களை சேர்த்தும் இட்லி தயாரித்து வருகிறோம். இதனை தொடர்ந்து இட்லி தயாரிப்பில் உலக சாதனையை படைத்துள்ளோம். இட்லியை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு என்று தெரிவித்துள்ளார்.