மதுரை அலங்காநல்லூர் அருகே வயது முதிர்வு காரணமாக இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே காந்திகிராமம் மஞ்சமலை சுவாமி கோவில் காளை வயது முதிர்வின் காரணமாக காலமானது. இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. இந்த காளை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், சக்குடி உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்று யாரிடமும் பிடிபடாமல் சிறப்பாக விளையாடி தங்கம், வெள்ளி நாணயம், போன்ற பல்வேறு பரிசுகளும் பொருட்களும் பரிசாக பெற்றுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு காளை.ஊருக்குள் சுற்றும் போது செல்ல பிள்ளையாகவும், வாடிவாசலில் சீறிப்பாயும் காளையாகவும் மாறி ஊருக்கு பெருமை சேர்த்து வந்துள்ளது.
இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாகஇந்த காளை திடீரென இறந்த தகவலறிந்து சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பலரும் வருகைதந்து காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும்வெளியூர் பொதுமக்கள் பலரும் வருகைதந்து காளைக்கு மாலை, வேட்டி துண்டு அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பெண்கள் உட்பட ஒட்டு மொத்த கிராமமே ஒன்று திரண்டு கண்ணீர் மல்க காளையை ஊர்வலமாக எடுத்து சென்று கோவிலுக்கு அருகே நல்லடக்கம் செய்தனர். பல ஜல்லிக்கட்டுகளில் பரிசுகளை பெற்று தந்த காளை இறந்தது இந்த கிராமத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.