ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் தண்ணீர் மற்றும் டீ, காபி பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்தினால் அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத அதே நேரம் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்காத கப், டம்ளர்கள் குறித்த தேடல்கள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கான விடையை தருகிறார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜெயலட்சுமி.
விசாகப்பட்டினத்தை சேர்ந்த முன்னாள் ஆசிரியரான ஜெயலட்சுமி, கேழ்வரகு மாவு மற்றும் அரிசி மாவினால் ஆன, டீ, காபி டம்ளர்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறார். ஐஸ்கிரீம் கோன்களை போல், இவர் தயாரிக்கும் டம்ளர்களை அப்படியே சாப்பிடலாம். இந்த டம்ளரில் சூடான பானத்தை 20 நிமிடம் வரை வைத்திருக்க முடியும். இந்த டம்ளரில் டீ குடித்து முடித்ததும், ஐஸ்கிரீம் கோனை சாப்பிடுவதைப் போல் இந்த டம்ளரையும் சாப்பிட்டு விடலாம். 60 மி.லி., 80 மி.லி., என 2 அளவுகளில் டம்ளர்களை செய்கிறார். நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் டம்ளர்கள் உற்பத்தி செய்கிறார். இதில் ஆண்டுக்கு 7 லட்சம் வரை லாபம் பார்ப்பதாக கூறியுள்ளார்.