கொரோனா பாதிப்புகள் குறையாமல் இருந்தால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
திருச்சி விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கொரோனா விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. புதிய வகை கொரோனா எந்த வித பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. பாதிப்புகள் குறையாமல் இருந்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறினார். தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் குறைவாகவே உள்ளது என்றும் கூறினார். ஏற்கனவே, புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சமூக இடைவெளி பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் கிருமிநாசினி உபயோகித்தல் உள்ளிட்டவை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.