• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Dec 26, 2022

நற்றிணைப் பாடல் 84:

கண்ணும், தோளும், தண் நறுங்கதுப்பும்,
திதலை அல்குலும் பல பாராட்டி,
நெருநலும் இவணர் மன்னே! இன்றே,
பெரு நீர் ஒப்பின் பேஎய் வெண் தேர்
மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம்,
சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன
உவர் எழு களரி ஓமை அம் காட்டு,
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அருஞ் சுரம்
ஏகுவர் என்ப, தாமே தம்வயின்
இரந்தோர் மாற்றல் ஆற்றா
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே.

பாடியவர்: ஆசிரியர் பெயர் தெரியவில்லை
திணை: பாலை

பொருள்:
தலைவியைப் பிரிந்து தலைவன் செல்வது எதற்கு? இரவலர்க்கு இல்லை என்று சொல்ல மனவலிமை இல்லாததால் அவர்களுக்கு உதவும் பொருளை ஈட்டிக்கொண்டு வரவே – இப்படித் தலைவியே தோழிக்குச் சொல்கிறாள்.
நேற்றும் அதற்கு முன்பும் என் கண், தோள், கூந்தல், திதலை வரி இருக்கும் அல்குல் ஆகியவற்றைப் பலபடப் பாராட்டிக்கொண்டு என்னுடன் அவர் இருந்தார். அந்தோ! (மன்னே!) இன்று கடத்தற்கு அரிய பாலைக்காட்டில் சென்றுகொண்டிருக்கிறார். அங்கே, கடல் போல் நீர் இருப்பது போல் தோற்றம் தரும் வெண்ணிறப் பேய்த்தேர் ஓடும். மரமே இல்லாத நீண்ட வெளி அது. அந்த வெளியில் மான் ஆசையோடு மேய்த்தேர் என்னும் மாயப் பொய்நீரை நாடி ஓடும்.

சில இடங்களில் தசும்பு என்னும் நீர்க்கசிவு இருக்கும்.  சுடுமண்ணில் அது கசிவதால் அந்த நீரும் சூடக இருக்கும். அது மத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் வெண்ணெய் போல் தோன்றும். அது பிறவா வெண்ணெய் நீர். வெயில் (உருப்பு) சுடுவதால் உவர்மண் சேற்றில் கசியும் நீர். ஓமை மரங்கள் மிகுந்திருக்கும் காடு அது. அங்கே அமர்ந்திருப்பதெல்லாம் வெயில் ஒன்றுதான். அதனால் வெப்ப அலை அங்கு வீசிக்கொண்டிருக்கும். இப்படிப்பட்ட காட்டில் அவர் சென்றுகொண்டிருப்பார் என்று சொல்கிறார்கள்.
எதற்காக இப்படிப்பட்ட காட்டில் அவர் செல்கிறார்? தம் இல்லத்துக்கு வந்து உதவும்படி யாராவது கேட்டால் அவரை இல்லை என்று சொல்லித் திருப்பி அனுப்ப மனவலிமை இல்லாதவர் அவர். வந்தவர்களுக்கு வழங்குவதற்காகப் பொருள் ஈட்டிவர அத்தகைய கொடிய காட்டில் செல்கிறார்.