அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தில் முறைகேடு நடப்பதால், கிராம கமிட்டி அனைத்து சமுதாயத்தினர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் அவனியாபுரம் கிராமத்தில் தைத்திருநாள் பொங்கல் அன்று முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் துவக்கம் அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் அன்று நடைபெறுவது வழக்கம்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் என் அமைப்பின் மூலம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனை எதிர்த்து கிராம கமிட்டி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து கிராமத்து பிரதிநிதிகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உத்தரவிட்டனர்.
ஆனாலும் தென் கால் பான விவசாயிகள் சங்கம் தன்னிச்சையாக செயல்பட்டதால் அவனியாபுரம் கிராம கமிட்டி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
தற்பொழுது ஜல்லிக்கட்டு போட்டி வரும் தைப்பொங்கல் அன்று துவங்கும் நிலையில் கிராம கமிட்டி சார்பில் நடத்த வேண்டும் என கிராம கமிட்டி நிர்வாகிகள் மந்தை அம்மன் கோவில் வழிபட்டு செய்தியாளர்களை சந்தித்தனர்.
தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் கிராம கமிட்டி மக்களை புறக்கணிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து தமிழக முதல்வர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலையிட்டு அவனியாபுரம் கிராம கமிட்டி சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற கோரிக்கை விடுத்துள்ளனர்.
அலங்காநல்லூர், பாலமேடு போன்ற ஊரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு கிராம கமிட்டி சார்பில் நடைபெறுகிறது அதேபோல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியும் கிராம கமிட்டி சார்பில் நடைபெற வேண்டும் என்று ஜல்லிக்கட்டு விழா குழ தலைவர் முருகன் தலைமையில் 50க்கு மேற்பட்டோர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.