• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

9துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Byவிஷா

Oct 22, 2024

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மத்திய வங்க கடல் பகுதியில் டானா புயலாக மாற வாய்ப்புள்ள நிலையில், தமிழகத்தில் 9 துறைமுகங்களுக்கு ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
தமிழகத்தில் கடந்த 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று (அக்.21) காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (22ஆம் தேதி) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. இது நாளை (23ஆம் தேதி) மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் வடமேற்கு வங்கக்கடலில் ஒடிசா, மேற்கு வங்கம் கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் என்றும், அக்.25ம் தேதி அதிகாலை பூரி கடற்கரை அருகே கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் உருவாகி தமிழ்நாடு கடற்பகுதிகளை விட்டு விலகி வடமேற்கு திசையில் ஓடிசா மேற்குவங்கம் நோக்கி நகர்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டில் பாதிப்பு இருக்காது என்றும் கடலோர மாவட்டங்களில் காற்றுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயலுக்கு கத்தார் நாடு பரிந்துரைத்த டானா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

அதேநேரம் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.