

தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் செப்டம்பர் மாத இறுதிக்குள் காலாண்டு தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டு தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்றும், தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே முடிவு செய்துகொள்ளவும் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது.மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில், 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 23 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும் காலாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 5-ம் தேதி வரையும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9-ம் தேதி வரையும் விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை விடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
