மாமல்லபுரத்தில் அரசுப்பேருந்து – ஆட்டோ நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்று சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் ஒரு குடும்பத்தினர் சென்னை நோக்கி ஆட்டோவில் வந்துகொண்டிருந்தனர். அப்போது மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த போது, பேருந்தும் -ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர், 2 குழந்தைகள், 3 பெண்கள் என ஆட்டோவில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆறு பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.