• Mon. Apr 21st, 2025

100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து பயங்கர விபத்து- தம்பதி உள்பட 3 பேர் பலி

ByP.Kavitha Kumar

Feb 22, 2025

இடுக்கி அருகே 100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து தம்பதி உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கேரளா மாநிலம் இடுக்கி அடிமாலி அருகே உள்ள பன்னியர்குட்டி பகுதியைச் சேர்ந்தவர் போஸ்(55). இவரது மனைவி ரீனா (48). இவர்கள் இருவரும் நேற்று முள்ளக்காணம் பகுதியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு ஜீப்பில் சென்றனர்.இதன் பின்பு இரவில் அங்கிருந்து தங்களின் வீட்டுக்கு ஜீப்பில் திரும்பிக் கொண்டிருந்தனர். ஜீப்பை ஆபிரகாம் (50) என்பவர் ஓட்டி வந்தார்.

பன்னியர்குட்டியில் உள்ள மசூதி அருகே வந்தபோது ஜீப் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த 100 அடி பள்ளத்தில் விழுந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயங்களுன் இருந்த போஸ், ரீனா, ஆபிரகாம் ஆகிய மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே போஸ், அவரது மனைவி ரீனா உயிரிழந்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓட்டுநர் ஆபிரகாம் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த ரீனா, கேரளாவைச் சேர்ந்த பிரபல தடகள வீராங்கனையான பீனாமோலின் சகோதரி ஆவார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜீப் கவிழ்ந்து தம்பதி உள்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.