செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் திருத்தேரி சிக்னலில், நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதியதில் குழந்தை உட்பட 3 பேர் மதுரையைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் காரில் சென்றிருந்தார். இதன்பின் அவர்கள் மதுரை நோக்கி காரில் இன்று காலை வந்து கொண்டிருந்தனர். காரில் கார்த்திக், அவரது மனைவி நந்தினி, அவர்களது மகள் இளமதி(7), மகன் சாய்வேலன்(1), நந்தினியின் தந்தை அய்யனார், அவரது மனைவி தெய்வபூஞ்சாரி, கார் ஓட்டுநர் சரவணன் ஆகிய 7 பேர் பயணம் செய்தனர்.
அப்போது செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயில் திருத்தேரி சிக்னலில் கார் நின்றது. அப்போது அதிவேகமோக வந்த லாரி காரின் பின்னால் வேகமாக மோதியது. இதில் அவரது கார் முன்னே நின்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. இரு லாரிகளுக்கும் நடுவில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் கார் ஓட்டுநர் சரவணன், நந்தினியின் தந்தை அய்யனார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், காரில் பயணம் செய்த கார்த்திக், நந்தினி, அவரது தாய் தெய்வபூஞ்சாரி மற்றும் சாய்வேலன், இளமதி ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாய்வேலன் உயரிழந்தார். இளமதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.