கோவை, பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராமசெட்டிபாளையம் பகுதியில், விற்பனைக்காகக் கஞ்சாவைப் பதுக்கி வைத்து இருந்த மூன்று வாலிபர்களைப் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இடம் இருந்து 2.400 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம், பேரூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினோத் மற்றும் காவலர்கள், ராமசெட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர், ஆறுமுககவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் குற்றத் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் சதாசிவம் என்பவருக்குச் சொந்தமான வாடகை வீட்டிற்கு அருகில் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்ற மூன்று நபர்களைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் விற்பனைக்காகத் தடை செய்யப்பட்ட கஞ்சாவைப் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த
சரவணன், சுண்டக்கா முத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (22), ஹரி ராகவேந்திரன் (22) என்பது தெரிய வந்தது.
அவர்கள் பதுக்கி வைத்து இருந்த 2.400 கிலோ கஞ்சா, மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து போதை பொருள் தடுப்புப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.





