கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே வாகன சோதனையின் போது சட்ட விரோதமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நபர் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் என 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2.250 கிலோ கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டக், காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உத்தரவின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கனகசபாபதி மேற்பார்வையில், பெரியநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான உதவி ஆய்வாளர் நமச்சிவாயம், காவலர்கள் அருண்குமார், அருண் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று காலை 10.30 மணி அளவில் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
குப்பேபாளையம் – காளிபாளையம் சாலையில் கோமாளி அரங்கன் கோவில் அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது, அங்குச் சந்தேகத்திற்கு இடமான வகையில் ‘TN 40 F 6728’ என்ற பதிவு எண் கொண்ட ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருந்த 3 நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் தற்போது ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி குடியிருக்கும் நிலச்சல் ரௌத் (35), ஆனந்த் (22) மற்றும் திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த உதயாஜெஸ்டின் (21), என்பது தெரியவந்தது.
அவர்களைச் சோதனையிட்டதில், விற்பனைக்காக வைத்து இருந்த 2.250 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர், மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்யப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.




