சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னைக்கு வரவேண்டிய மற்றும் புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதம் அடைந்துள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக மழை பரவலாக பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் சென்னை விமானநிலையத்தில் விமான சேவை பாதிப்படைந்துள்ளது.
சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டிய 17 விமானங்கள், புறப்பட வேண்டிய 18 விமானங்கள் தாமதம் அடைந்துள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதன்படி டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, மதுரை, திருச்சி, கோழிக்கோடு, கோவா, ஐதராபாத் விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியவில்லை.