


தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் ரமேஷ் இவர் கொத்தனார் தொழில் செய்து வருகிறார். ரமேஷ் கூடலூரில் இருந்து கோயம்புத்தூருக்கு சென்று ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அங்கே குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி மல்லிகா இவர்களுக்கு மணிகண்டன், நிவேதா (16), என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் நிவேதா கோயம்புத்தூரில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதற்கிடையே தற்போது கோடை விடுமுறை மற்றும் சொந்த ஊரில் நடைபெறும் திருவிழாக்களில் பங்கேற்பதற்காக ரமேஷ் குடும்பத்துடன் கூடலூர் வந்துள்ளார்.

இன்று கூடலூர் லோயர் கேம்ப் இடையே தம்மனம்பட்டி பகுதியில் உள்ள மதுரை கூட்டு குடிநீர் திட்டம் செயல்பட்டு வரும் பகுதிக்கு அருகே உள்ள முல்லைப் பெரியாறு வண்ணான் துறை அருகே ஆற்று நீரில் குளிப்பதற்காக ரமேஷ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சென்றுள்ளனர். தண்ணீரில் குளிக்கும் போது நிவேதா திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.

இதைப் பார்த்ததும் அவரைக் காப்பாற்றுவதற்காக குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீவிரமாக முயற்சி செய்தபோதும் சிறுமி ஆற்றுப்பகுதியில் மூழ்கியுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் தண்ணீரில் மூழ்கிய சிறுமி நிவேதாவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து குமுளி (லோயர் கேம்ப்)காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைத்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோடை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த பள்ளிச் சிறுமி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

