நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அடுக்குவதற்கான அறிவியல்பூர்வமான அணுகுமுறையான’கோலன் பகுப்புமுறை’ கண்டுபிடித்த இந்திய நூலக தந்தை ஆர்.ரங்கநாதன் பிறந்ததினம்.
நூலகங்களில் இருக்கும் புத்தகங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, எடுப்பதற்கு எளிமை படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கு முந்தைய காலகட்டத்தை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படி ஒரு சூழ்நிலையில் ‘கோலன் பகுப்புமுறை’ என்ற அறிவியல்பூர்வமான அணுகுமுறையைக் கொண்டுவந்தவர், சீர்காழி ஆர்.ரங்கநாதன். இவர் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தின் முதல் நூலகர் ஆவார்.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள வேதாந்தபுரம் என்ற ஊரில் 1892-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ம் நாள் பிறந்தவர் ஆர்.ரங்கநாதன். 1924-ல் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் முதல் நூலகராக பணியில் சேர்ந்தார். லண்டன் சென்று, நூலக அறிவியலில் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றார். அங்கிருந்து நாடு திரும்பியதும், பல்கலைக்கழக நூலகத்தை சீரமைத்தார். சென்னை நூலகச் சங்கத்தை நிறுவினார். நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அடுக்குவதற்கான அறிவியல்பூர்வமான அணுகுமுறையே ‘கோலன் பகுப்புமுறை’ எனப்படுகிறது. இந்தப் பகுப்பு முறை இவரால் ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டதாகும்
நூலகவியலுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக 1957-ம் ஆண்டு, இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து சிறப்பித்தது. இவரது பிறந்த தினமான ஆகஸ்ட் 12 ‘தேசிய நூலக தின’மாக மத்திய அரசு அறிவித்துள்ளது.