



நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் விசைப்படகுகளுடன் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. தமிழகத்தில் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது. அத்துடன் தமிழக மீனவர்களின் படகுகள், மீன்கள், வலைகள், சாதனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகிறது. அத்துடன் திடீரென தமிழக மீனவர்கள் மீது தாக்குதலும் தொடுத்து வருகிறது.
இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதங்கள் மூலமாக பலமுறை வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் விசைப்படகுடன் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு வடக்கு கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 11 மீனவர்களை விசைப் படகுகளுடன் சிறைபிடித்து அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


