• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தஞ்சையில் 1,039ஆவது சதயவிழா தொடக்கம்

Byவிஷா

Nov 11, 2024

தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய மாமன்னர் ராஜராஜசோழனின் 1,039ஆவது சதயவிழா இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.
மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு விழா இன்று காலை 8.30 மணிக்கு மங்கல இசையுடன் தொடங்குகிறது. சதய விழா குழு தலைவர் து.செல்வம் வரவேற்கிறார். ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகிக்கிறார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தொடக்க உரை நிகழ்த்துகிறார். பழநி ஆதீனம் குருமகா சன்னிதானம் சாது சண்முக அடிகளார் அருளுரை வழங்குகிறார்.
தொடர்ந்து, கருத்தரங்கம், நாத சங்கமம், 1,039 பேர் பங்கேற்கும் பரத நாட்டியம், கவியரங்கம், பட்டிமன்றம், ‘சதய நாயகன் ராஜராஜன்’ வரலாற்று நாடகம் நடைபெற உள்ளன. நாளை காலை கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல், மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறை பண்ணுடன் 100-க்கும் அதிகமான ஓதுவாமூர்த்திகளுடன் ராஜ வீதிகளில் வீதியுலா, பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேராபிஷேகம் நடைபெறும். மாலையில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன் வீதியுலா நடைபெறும்.
பின்னர் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் கவிஞர் வைரமுத்து, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் சிறப்புரை ஆற்றுகின்றனர். விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், சதய விழா குழு, அரண்மனை தேவஸ்தானம் ஆகியவை இணைந்து செய்து வருகின்றன. விழாவிற்கான முன்னேற்பாடுகளை ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் நேற்று ஆய்வு செய்தார். அவர் கூறும்போது, “2 நாட்கள் நடைபெறும் சதய விழாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பங்கேற்பார்கள என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதி களும் செய்யப்பட்டுள்ளன. சதய விழாவில் தமிழகத்தின் பண்பை பறைசாற்றும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன” என்றார்.