• Sat. Apr 20th, 2024

தமிழகம் முழுவதும் 103 போலி மருத்துவர்கள் கைது..!

Byவிஷா

Apr 25, 2023

தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் அதிகமாக நடமாடுவதாக வந்த புகாரை அடுத்து, போலீசாரின் தேடுதல் வேட்டையில் 103 போலி மருத்துவர்கள் பிடிபட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிளினிக் அமைத்து போலி டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் 103 பேர் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்திய மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், தகுந்த மருத்துவ படிப்பு இல்லாமல், இந்தியமருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில், மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது சுகாதாரத் துறை இணை இயக்குனர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும்படி அணைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திர பாபு, அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். இதனையடுத்து. கடந்த 18 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் தமிழ்நாடு முழுவதும் 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூரில் 12 பேரும், தஞ்சாவூர் மற்றும் சேலத்தில் 10 பேரும், திருவள்ளூரில் 9 பேரும், பெரம்பலூரில் 8 பேரும், திண்டுக்கல்லில் 6, தேனி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டையில் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *