

ஆசிரியர் காலி பணியிடங்கள் படிபடியாக நிரப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் மற்றும் துறைசார் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது; “கல்வி தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பணியாணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அவரைப் பற்றி வரும் தகவல் உண்மையாக இருந்தால், ஏற்கெனவே விண்ணப்பித்திருந்த நபர்களில் இருந்து தகுதியான ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, கல்வி தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்படுவார்.அரசுப் பள்ளிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளன. அதில், முதுநிலை ஆசிரியர் பணி நியமனம் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். அதேபோல், இதர ஆசிரியர் பணியிடங்களும் படிப்படியாக நிரப்பப்படும்.
நடப்பு கல்வியாண்டில், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் நிதித்துறையிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
