• Thu. Apr 25th, 2024

தமிழகத்தில் மின்இணைப்புடன் 1 கோடி
ஆதார் எண்கள் இணைப்பு: செந்தில்பாலாஜி

தமிழகத்தில் மின்இணைப்புடன் 1 கோடியே 3 லட்சம் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு இருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
தெரிவித்தார்.
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் (பகிர்மானம்) மா.சிவலிங்கராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஆய்வுக்கு பிறகு, அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேவைப்படுகிற நாட்களுக்கேற்ப இந்த சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இன்று (அதாவது நேற்று) காலை 11 மணிக்கு வரை ஏறத்தாழ ஆன்லைனில் 51 லட்சம் பேர் இணைத்துள்ளார்கள். பிரிவு அலுவலகங்களில் செயல்படும் ஆன்லைன் சேவையில் 52 லட்சம் பேர் இணைத்திருக்கிறார்கள். மொத்தம் 1 கோடியே 3 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் சேர்த்து ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய அந்தப் பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது.
இந்த மாதம் இறுதி வரை அதற்கான காலங்கள் இருக்கின்றன. எனவே, இந்த மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய பணிகள் மிகச் சிறப்பாக மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இப்பொழுது மேம்படுத்தப்பட்டு உடனுக்குடன் அதாவது 2 நிமிடங்களில் ஒருவர் சுலபமாக இணைத்துவிடலாம். சென்னையைப் பொறுத்தவரை வணிக வளாகங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த மாத இறுதிக்குள் பெரும்பான்மையான மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய பணிகள் முடியும்.
சென்னையைப் பொறுத்தவரை 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வணிக வளாகங்கள், அதேபோல தலைமைச்செயலகத்தினுடைய இந்த பகுதிகள் உள்ளிட்ட 15 இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேவைப்பட்டால் கூடுதலாக சிறப்பு முகாம் நடத்துவதற்கு மின்வாரியம் தயாராக இருக்கிறது. வரும்
25-12-2022 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகைநாளைத் தவிர, மீதம் இருக்கக்கூடிய விடுமுறை நாட்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *