தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சின்னமனூர் உள்ளிட்ட பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் மருத்துவ குணம் வாய்ந்த நாட்டு வெற்றிலை அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் வெற்றிலை விவசாயத்திற்கு இதுவரையில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படாமல் உள்ளது. மேலும் வெற்றிலை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கப்படாமலும் உள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக சார்பில் நடத்தப்பட்ட ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பெரியகுளம் வெற்றிலை விவசாயிகளின் சார்பில் ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. வெற்றிலை பயிர் காப்பீட்டு திட்டம், வெற்றிலை ஆராய்ச்சி நிலையம், வெற்றிலை விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது.
தற்போது திமுக ஆட்சி அமைத்து 100 நாட்களை கடந்து இரண்டு தினங்களுக்கு முன்பாக, தமிழக வரலாற்றில் விவசாயத்திற்கான தனியாக பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. விவசாயத்திற்கு தனியான பட்ஜெட் அறிவிப்பை விவசாயிகள் அனைவரும் கொண்டாடி வரும் நிலையில், வெற்றிலை விவசாயத்திற்கு என எந்த அறிவிப்பும் வெளியிடாதது பெரும் ஏமாற்றமாகம் அளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மருத்துவக் குணம் வாய்ந்த வெற்றிலை விவசாயத்தை காத்திடவும், தங்களது கோரிக்கையான வெற்றிலையை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவேண்டும், வெற்றிலை ஆராய்ச்சி மையம் கட்டுதல் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் கொடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.