
மதுரை உத்தப்புரம் பொது இடத்தில் பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள், இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி – விதிகளை மீறி குழந்தைகளை கைது செய்த காவல்துறை – தள்ளுமுள்ளு. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் பரபரப்பு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு இரு பிரிவினரிடையே பிரச்சனை நிலவிவரும் நிலையில் அந்த கிராமத்தில் பாலம் அமைக்க வலியுறுத்திய நிலையில் மற்றொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மதுரை மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பலமுறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது ஆனால் முடிவு எட்டப்படாத நிலையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பாலத்தை கட்டுவதற்கு உத்தரவு வழங்கிய நிலையில் இன்று காலை அரசு அதிகாரிகள் தலைமையில் பாலம் கட்டுவதற்கான பணிகளை தொடங்க வந்த நிலையில் மற்றொரு தரப்பினர் பொது இடத்தில் பாலம் கட்டுவதால் இரு தரப்பு மோதல் நடக்கும் என்பதால் பாலத்தை மாற்று இடத்தில் அமைக்க கோரி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கைது செய்தனர்.
அப்போது பெண்கள் மற்றும் போலிசாரிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே குழந்தைகளுடன் வந்த தாய்மார்களையும் தரதரவென இழுத்துசென்று காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டித்து உத்தப்புரம் கிராம பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தீர்வுகிடைக்கும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி தெரிவித்தனர்.