தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டு டேக்வாண்டோ போட்டியில் தொடர்ந்து 2ம் ஆண்டாக தங்கம் வென்ற வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் பூடானில் கடந்த 7ஆம் தேதி முதல் தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வீரர் வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர்.
பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் இந்தியா சார்பில் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட எஸ்.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை – கமலாநேரு தம்பதியினரின் மகன் அன்புதுரை என்ற மாணவர் டேக்வாண்டோ போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார்.
நேபாளத்தில் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற தெற்காசிய போட்டிகளில் தங்கம் வென்ற மாணவன் அன்புதுரை தற்போது நடைபெற்ற தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டு போட்டிகளிலும் இரண்டாவது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தார்.
தங்கம் வென்று தாயகம் திரும்பிய வீரருக்கு பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்றிணைந்து பட்டாசு வெடித்து சால்வையணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
“ தனது உறவினர் மற்றும் தாயுடன் கல்வி பயின்றவர்கள் உதவியால்தான் போட்டிக்குச்செல்ல முடிந்தது என்றும், அவர்களுக்காகவே தான் இந்த பதக்கத்தை வென்றதாகவும் தங்கத்தை வென்ற” மாணவன் அன்புதுரை நெகிழ்ந்தார். தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க அரசின் உதவி தனக்கு தேவை எனவும் அடுத்து நடைபெறும் காமன்வெல்த் போட்டியிலும் தங்கப் பதக்கம் வெல்வேன் எனவும் நம்பிக்கையுடன் தெரிவித்தார். அடுத்து நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு நிச்சயம் பயிற்சி மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.