மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட 4 தயாரிப்பாளர்களுக்கு சேர வேண்டிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல், படத்திலும் நடிக்காமல் சிம்பு ஏமாற்றி வருவது தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பெரும் தலைவலியாக மாறியது. எனவே இந்த பிரச்சனைகளை பேசி தீர்க்க முடிவெடுத்த தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. வழக்கம் போல் வந்தது சிம்பு இல்லை, அவருடைய அம்மா உஷா ராஜேந்தர் தான்.
அவரும் மகன் மீதான தயாரிப்பாளர்களின் கதறல்களை எல்லாம் கேட்டுவிட்டு வழக்கம் போல் சிம்புவிடம் கேட்டு சொல்கிறேன் என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். ஆனால் சிம்பு தரப்பிலிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை, இதனால், ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கம் கூறிய அடிப்படையில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கவிருந்த சிம்பு படத்தின் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தரவேண்டாம் என தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டது. ஆனால் அவர்களின் கோரிக்கையை மீறி படப்பிடிப்பில் கலந்து கொண்டது தொழிலாளர் சம்மேளனம் என்கின்ற குற்றசாட்டை கூறியது.
இதனால் பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலேயே இனி படப்பிடிப்பு நடக்கும் என அறிவித்தது. இதைக் கேட்டு ஆடிப்போன ஆர்.கே.செல்வமணியோ ஐசரி கணேஷன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு பட ஷூட்டிங் திருச்சொந்தூரில் நடக்க உள்ளதாகவும், அதற்கு ஐசரி கணேசன் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் அனுமதி பெற்ற பிறகே தாங்கள் ஷூட்டிங்கில் பங்கேற்றதாகவும் விளக்கமளித்தார். மேலும் நடிகர் சிம்பு சம்பந்தப்பட்டு 4 தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினை இருப்பதால் சிம்பு நடிக்கும் திரைப்படத்திற்கு ஒத்துழைப்பு தரக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சம்மேளனத்தை கேட்டுக் கொண்டது. சம்மேளனமும் அதன்படியே நடந்து வந்தது என்பதையும் உறுதிபடுத்தினார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமோ அல்லது அதன் தலைமைப் பொறுப்பில் இருக்கின்ற ஆர்.கே.செல்வமணியாகிய நானோ தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையேயான கையெழுத்திடப்பட்ட எந்த ஒப்பந்தத்தின் விதிகளையும் மீறவில்லை.
ஏதோ காழ்ப்புணர்ச்சியில் பின்புலத்தில் யாரோ இருந்து வழி நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
நியாயத்திற்கு புறம்பாக எங்கள் சம்மேளன தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தினால், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் முறையிட்டு தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் சுமுகமான தீர்வு கிடைக்கப்பெறுவோம் என்றும் விளக்கமளித்துள்ளார் ஆர்.கே.செல்வமணி.