

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் ரயிலில் டெல்லி செல்ல முயன்ற விவசாயிகள் போலீசாரால் தடுத்து நிறுத்தம். உடலில் நாமமிட்டு, அரை நிர்வாணத்துடன் ஏர் கலப்பையை ஏந்தியபடி கரூர் பைபாஸ் ரோடு சாலையில் அமர்ந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டம். விவசாயிகள் மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு.
தமிழகத்தை பாலைவனமாக்கும் நோக்கில் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்றும், அணை கட்டுவதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும், மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 400பேர் 23ம் தேதி டெல்லி சென்று போராட திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள விவசாய சங்க மாநில அலுவலகத்தில் இருந்து அரை நிர்வாணத்துடன் ரயிலில் டெல்லி செல்ல முயன்ற விவசாயிகளின் ரயில் டிக்கெட்டை போலீசார் பறிமுதல் செய்து, விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் அனைவரும் உடலில் நாமமிட்டபடி, அரை நிர்வாணத்துடன் ஏர் கலப்பையை ஏந்தியபடி கரூர் பைபாஸ் ரோடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கம் இட்டனர்.
விவசாயிகள் மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, இதனையடுத்து பொதுமக்களும் விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அங்கு பதட்டம் நீடிக்கவே, மறியலில் ஈடுபட்டிருந்த மணப்பாறையை சேர்ந்த ராமலிங்கம் என்ற விவசாயி மத்திய அரசு தங்களை காப்பாற்றவில்லை என்று கூறி திடீரென்று நிர்வாணமாக ஓடியதுடன் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் குண்டுகட்டாக கைதுசெய்து பேருந்தில் ஏற்றி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விவசாயிகளை நாட்டின் அடிமைகளாக நினைப்பதாகவும், விவசாயிகள் போராட்டத்தை போலீசார் நடத்துவதாகவும் அய்யாக்கண்ணு குற்றம் சாட்டினார்.
