• Fri. Apr 19th, 2024

என்னுயிர் தம்பி போயிட்டியா!! பேரிழப்பால் கதறி துடிக்கும் சீமான்!…

By

Aug 9, 2021

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான கடலூர் கடல் தீபன் என்பவர் உடல் நலக்குறைவால் திடீரென மரணமடைந்தார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்ணீர் மல்க உருக்கமான இரங்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், கடலூர் மண் கண்டெடுத்த மாபெரும் போராளி, என்னுயிர் இளவல் கடல்தீபனது மறைவு நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமல்லாது இனத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்னுயிர் தம்பி கடல்தீபன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன். அச்செய்தி கேள்வியுற்ற நொடிமுதல் ஆற்ற முடியா பெரும் வேதனைக்குள் சிக்குண்டு தவிக்கிறேன். அளவற்ற துயரத்தால் விழிகளில் கண்ணீர் நனைக்கிறேன்.

என் உயிரோடும், உடலோடும் எப்போதும் இணைந்த ஒன்று, இல்லாமல் போனது போல வேதனையின் உச்சத்தில் நிற்கிறேன். என்னுயிர் தம்பி கடல்தீபன் அவர்கள் கடலூர் மண் கண்டெடுத்த மாபெரும் இனமான போராளி. தமிழீழத் தாயகத்தில் நடந்த மாபெரும் இனப்படுகொலையைக் கண்டு, அதனைச் சகிக்க முடியாமல் வெளிநாட்டில் செய்து கொண்டிருந்த பணியை விட்டுவிட்டுத் தாய்நாட்டில் போராட்டக்களம் அமைக்கப் புறப்பட்டு வந்த புரட்சியாளன் அவன். நாம் தமிழர் கட்சி தொடங்கிய காலந்தொட்டு, என்னுடன் தோளுக்குத் துணையாக நின்று என் வாழ்வின் எல்லா ஏற்றத்தாழ்வுகளிலும் உடனிருந்து, உற்ற துணையாய், உயிர் தம்பியாய் இருந்து காத்தவர்களில் அவனும் ஒருவன்.

கடந்த 2011ஆம் ஆண்டு, தானே புயலால் ஒட்டுமொத்த கடலூரும் அழிவின் விளிம்பில் நின்றபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகேட்டு நடைபெற்ற நடைபயணத்தைப் பெரும் சிரத்தையெடுத்து முன்னின்று நடத்திக் காட்டியவன். கடந்த 2013ஆம் ஆண்டு, கடலூரில் நடைபெற்ற மாவீரர் நாள் மாநாட்டிற்கு, காஷ்மீர் விடுதலைப் போராளி யாசின் மாலிக்கை அழைத்துவந்து கூட்டம் நடத்த முதன்மைப் பங்காற்றியவன்.

2015ல் பெருமழை வெள்ளம் கடலூரைக் கலங்கடித்தப்போது மக்களைக் காக்க பொறுப்பை உணர்ந்து வீதியில் அலைந்தவன். ஏறக்குறைய கடலூர் அழிந்துவிட்டது என நினைக்க வைத்த கடலூர் வெள்ளக்காலத்திலும் பிறந்த மண்ணைக் காக்க, மீண்டும் கடலூரை உருவாக்க மாபெரும் மீட்டெடுப்புப் போராட்டத்தை நாம் தமிழர் தம்பிகளோடு நடத்தி, கடலூரைக் காத்தவன். 2016 ஆம் ஆண்டு, சட்டமன்றத்தேர்தலில் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்யும் மாநாட்டினை குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து, உலகமே வியக்கும் வகையில் நிகழ்த்திக் காட்டிய களப்பணியாளன்.

அந்தச் சட்டமன்றத்தேர்தலில் கடலூர் வேட்பாளராக நான் களம் கண்டபோது என் சார்பாகத் தெருத்தெருவாக ஓடி வாக்குகள் சேகரித்து எனது நகலாகவே மாறி நின்றவன். காவிரி நதிநீர் உரிமை மீட்பு போராட்டத்தின் போது பேருந்து மறியலில் ஈடுபட்டக் காரணத்திற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியின் விளைவால் குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டபோதும் அதைத் தன் பொதுவாழ்க்கைக்குக் கிடைத்த பொன்பதக்கம் எனக்கருதி புன்னகையோடு வெஞ்சிறை புகுந்தவன்.

2016ஆம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தல் களத்தில் குறிஞ்சிப்பாடி தொகுதியிலும், 2021ஆம் ஆண்டு, கடலூர் தொகுதியிலும் போட்டியிட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றவன். 2017ஆம் ஆண்டு, தமிழர் பாரம்பரியத்தை மீட்டெடுக்க தடையை மீறி முதன் முதலில் ஜல்லிக்கட்டை நடத்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவன். ஆர்ப்பரித்து வரும் அடக்குமுறைக்கு அஞ்சாதவன்.

ஓங்கி ஒலிக்கும் ஒடுக்குமுறைகளுக்கு ஒருபோதும் அடிபணியாதவன். இப்படி ஒரு போராளி இந்த இனத்தில் பிறந்திருக்கிறான் என எண்ணி அகமகிழும் அளவுக்கு அனைவரையும் பெருமைப்பட வைத்தவன். நாம் தமிழர் கட்சியினர் அனைவரையும் சொந்த உறவாக நேசித்து அன்புப்பாராட்டிய பேரன்புக்காரன். நிர்வாக மேலாண்மை நிறுவனம் ஒன்றை நடத்தி, பல இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி அளிக்கின்ற வகுப்புகளைக் கொடுத்து, பலருக்கும் உதாரணமாகத் திகழ்ந்தவன்.

கடலூர் மண்ணிலே அவன், ‘சீமானின் தம்பி’ எனத் தன்னை அவன் அடையாளப்படுத்திக்கொள்ள, நான் கடல்தீபனின் அண்ணன் என எண்ணிப் பெருமைப் பொங்க நிமிர்ந்து நிற்க காரணமாக அமைந்தவன்.எதற்கும் அவன் கலங்கியதில்லை. இன்று நம் எல்லோரையும் கலங்க வைத்து ஆட்படாதவன்.

உடல் நலத்தை மிகச்சரியாகப் பேணுபவன். ஆனாலும், கொரோனா கொடுந்தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது அவனது உடல்நலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அதிலிருந்து மீண்டு மீண்டும் மக்கள் பணியில் அவன் ஈடுபடத் தொடங்கிய போது திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தது பெரும் வேதனைக்குள் ஆழ்த்தியிருக்கிறது.

நான் மிகவும் நேசிக்கின்ற எனது நெருங்கிய உறவுகளைத் தொடர்ச்சியாக இழக்கின்ற கொடுங்காலமாக இக்காலம் என்னை வதைத்து வருகிறது. அதிலும் என் தம்பி கடல்தீபன் இழப்பு என்னை ஒட்டுமொத்தமாக நொறுக்கிப்போட்டிருக்கிறது. என் விழிகள் நிறைய அவனைக் கண்டு நான் பெருமிதம் அடைந்திருக்கிறேன். யாரைப் பற்றியும் புறம் பேசாத, குற்றங்குறை காணாத அவனது பேரன்பு குணம் அவனை எல்லோருக்கும் பிடித்தவனாக ஆக்கி வைத்திருந்தது. அவனது இழப்பு, தனிப்பட்ட முறையில் எனக்கு மீண்டு வர முடியாத பெரும் வலி மட்டுமல்ல, நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமல்லாது இனத்திற்கே விளைந்திருக்கிற மிகப்பெரிய ஈடு செய்ய முடியாத பேரிழப்பு!

நாம் தமிழர் என்கின்ற மாபெரும் அரசியல் பேரியக்கத்தின் முன்னணி கட்டளைத் தளபதியாக, களப்போராளியாக, கட்சியை உருவாக்கும் ஒரு தேர்ந்த நிர்வாகியாகத் திகழ்ந்த அவனை இழந்த நாங்கள் எவ்வாறு மீண்டு வரப்போகிறோம் எனத் தெரியாமல் தவிக்கிறோம். எனக்கே ஆறுதல் தேடுகிற இந்த மனநிலையில் நான் யாரை தேற்றுவது என்று தெரியவில்லை.

தம்பியை இழந்து வாடும் அவனது குடும்பத்தார், உற்றார், உறவினர் மற்றும் உலகம் முழுக்க இருக்கின்ற நாம் தமிழர் உறவுகள், மாபெரும் போராளியை இழந்து வாடும் கடலூர் மக்கள் அனைவருக்கும் எனது கண்ணீர் மிகுந்த ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கேற்கிறேன். இந்த இனத்தைக் காக்க, இந்த மண்ணைக் காக்க, தமிழர் மானத்தைக் காக்க, என் தம்பி கடல்தீபன் எந்தப் புனித இலட்சியத்திற்காக இறுதிவரை போராடி நின்றானோ, அந்த இலக்கு வெல்ல அவன் உடன்பிறந்தாராகிய நாங்கள் எங்கள் உயிர் உள்ளவரை உறுதியோடு சமரசமில்லாமல் களத்தில் நிற்போம் என இச்சமயத்தில் உறுதி ஏற்கிறோம்.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், கடலூர் மண் கண்டெடுத்த மாபெரும் தமிழினப்போராளி ! என்னுயிர் இளவல் கடல்தீபன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *