10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு இன்று, முதன் முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. சட்டப்பேரவை வரலாற்றிலேயே முதன் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்றவுடன் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக அளித்துள்ள நிலையில், அதற்கான விடை இன்றைய பட்ஜெட் தாக்கலில் கிடைத்துள்ளது.
கடும் நிதி நெருக்கடியில் தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார். அதில் குறிப்பாக அனைவருக்கும் வீடு என்ற திட்டம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 2021 – 22ம் ஆண்டுக்குள் சுமார் 2 லட்சம் வீடுகள் 8 ஆயிரத்து 17 கோடி செலவில் கட்டமைப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கிராமப்புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு 5 ஆண்டுகளில் வீடு கட்டித்தரப்படும், கிராமப்புறங்களில் 8 லட்சத்து 3 ஆயிரத்து 924 ஏழைகளுக்கு 5 ஆண்டுகளில் வீடு கட்டித்தரப்படும் என்றும், இதற்காக கிராமப்புற வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.3 ஆயிரத்து 548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
10 ஆண்டுகளில் குடிசைகள் அற்ற மாநிலமாக தமிழகம் விளங்கும் என பட்ஜெட்டில் உறுதியளித்த நிதி அமைச்சர், இதற்காக குடிசை மாற்று வாரியத்திற்கு 3 ஆயிரத்து 954 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.