எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, ஹைதாராபாத்தில் ஜொமேட்டோ ஊழியர் ஒருவர் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்தியா முழுவதும் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தம் செய்து வருவதால் பல பகுதிகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். பல இடங்களில் பெட்ரோல் டீசல் ஸ்டாக் இல்லை என்ற பலகைகள் தான் வைக்கப்பட்டுள்ளன. வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடும் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு உடனடி தீர்வு காணும் வகையில் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டன. ஓட்டுநர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். அந்த வகையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆன்லைன் உணவு விநியோக ஊழியர்கள் சரியான நேரத்தில் உணவு வழங்க முடியவில்லை என புகார் எழுந்தது.
இந்த சூழ்நிலையை சமாளிக்கும் வகையில் ஆன்லைன் உணவு டெலிவரிக்காரர்கள் குதிரையில் சவாரி செய்து உணவு டெலிவரி செய்தனர். ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குடாவில் குதிரையில் உணவு வழங்கச்சென்ற ஜொமேட்டோ ஊழியர் இது குறித்து பெட்ரோல் இல்லாததால் வண்டியை வெளியே எடுக்க முடியவில்லை. இருந்த போதிலும் ஆர்டர் செய்தவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்குவதற்காக குதிரையில் செல்கிறோம் எனக் கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.