• Sun. May 3rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

அக்னிபாத் திட்டத்திற்கு மதுரையிலும் எதிர்ப்பு… ரயில் மறியல் போராட்டத்தில் இளைஞர்கள்..

Byகாயத்ரி

Jun 20, 2022

மதுரையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியலில் ஈடுபட முயற்சித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

இந்திய ராணுவத்தில் அக்னி பாத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்க்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் ஆகிய சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், அதன் ஒருபகுதியாக மதுரையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள கட்டபொம்மன் சிலையில் இருந்து ரயில் நிலையம் நோக்கி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்த்தினர் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து ரயில் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டோரை தடுக்க முயன்ற போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. 30 நிமிட போராட்டத்திற்கு பின்னர் குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்யப்பட்டு பாதுகாப்பாக காவல்துறை வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டனர். போராட்டத்தை முன்னிட்டு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ட்ரோன் கேமரா மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக ரயில் நிலைய சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.