• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

வாரம் முழுவதும் பணி! ஒரு ஊதியம் 3 பணிகள்!! அங்கன்வாடி ஊழியர்களின் நிலமையை அரசு கண்டுகொள்ளுமா தமிழக அரசு!

தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ். ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக மாநிலப் பொதுச்செயலாளர் ரா.வாசுகி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா நோய்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக தமிழக மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் கொரோனா தடுப்பூசி மகா கேம்ப் கடந்த 12.9.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று துவங்கப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எங்களது சங்கம் வரவேற்பதாவும்,
இப்பணியில் தமிகத்தில் ICDS திட்டத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டு இப்பணியை மேற்கொண்டுவருகின்றனர்.


அங்கன்வாடி மைய காலிப்பணியிடங்கள் 2ஆண்டுகளுக்கு மேலாக நிரப்பபடாத நிலையில் அங்கன்வாடி பணியாளர்கள் கூடுதலாக இரண்டு மையங்களின் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர் .. மேலும் செப்டம்பர் மாதம் முழுவதும் தினமும் ஒரு தலைப்பில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகள் மையங்களில் நடத்தி வருவதோடு மட்டுமல்லாது “போஷன் மா ” நிகழ்ச்சி, கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு, பாரம்பரிய உணவு திருவிழா, வளர் இளம் பெண்களுக்கான பயிற்சி என ஓய்வின்றி அதிகமான பணியை் அங்கன்வாடி பணியாளர்கள் மேற்கொண்டு வரும் பணிகளோடு பிற துறை சார்ந்த (B L O பணி) வாக்குசாவடி நிலை அலுவலர் பணி மற்றும் பொது சுகாதாரத்துறை சார்ந்த பலபணிகளோடு கொரோனா கணக்கெடுப்பு பணி, விழிப்புணர்வு பணி உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


கடந்த 1.9.2021 முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டு மதிய உணவு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வாரந்தோறும் ஞாயிறு விடுமுறை நாள் அன்றும் நடத்தப்படும் கொரோனா தடுப்பூசி கேம்ப்களில் ஈடுபடுத்தப்பட்டு இப்பணியையும் அங்கன்வாடி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். உடல்நிலை மற்றும் குடும்ப சூழல் காரணமாக இப்பணியில் ஈடுபட இயலாத பணியாளர்களை பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு தெரிவித்து தற்காலிக பணிநீக்கம், மற்றும் நிரந்தர பணிநீக்கம் செய்வோம் என ஊழியர்களை மிரட்டி வருகின்றனர்.


இதனால் அங்கன்வாடி ஊழியர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி ஊழியர்களின் பணிச்சுமையை கருத்திற் கொண்டு கொரோனா தடுப்புசி கேம்ப் பணி, மற்றும் பிற துறைசார்ந்த பணிகளில் அங்கன்வாடி பணியார்களை ஈடுபடுத்துவதை தமிழக அரசும், அதிகாரிகளும் முற்றிலும் கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் எங்களது சங்கத்தின் மாநில மையத்தின் சார்பாக மனு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.