டில்லியில் கரியப்பா மைதானத்தில், என்சிசி படையினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில், என்சிசி படையினர் அவரவர் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தியதுடன், சாகசங்களையும் செய்து காட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, என்சிசி படையினரின் திறமைகளை பார்வையிட்டதோடு, அவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, சிறந்த வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அதன் பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது; “தேசமே முதன்மை என்ற எண்ணம் அனைவரிடத்திலும் பரவ வேண்டும். நானும் என்சிசியின் உறுப்பினர் என்பதில் பெருமை கொள்கிறேன். என்சிசியை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.இன்றைய பேரணியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
இது, இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எடுத்துக் காட்டுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் என்சிசி படையினர் எல்லைப் பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.ஆயுதப்படையில் பெண்களுக்கு அதிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் அதிக அளவு பெண்கள் என்சிசியில் இணைய வேண்டும்” என்று பெருமிதத்துடன் கூறினார்.