• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரையை கோட்டை விடுகிறதா அ.தி.மு.க…?

Byவிஷா

Feb 21, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் மதுரை மாநகராட்சியில் அதிமுக பின்னடைவை சந்திக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பெரிதும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன. ஆளுங்கட்சியாக திமுக இருப்பதால் அக்கட்சிக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் கொங்கு மண்டலம் மற்றும் தென் மண்டலத்தில் அதிமுகவிற்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் மதுரை மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் காட்டிய மெத்தனம் தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அக்கட்சி தலைமைக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, பாஜக உடனான கூட்டணி முறிவால் மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் அதிமுகவே நேரடியாக வேட்பாளர்களை நிறுத்தியது. இவர்கள் களத்தில் நிறுத்தப்படும் முன்பாக தேர்தலுக்கு நன்றாக செலவு செய்ய வேண்டும். பணமில்லை என்ற சலசலப்புகள் ஏதும் வரக்கூடாது என்று கட்சி தலைமை அறிவுறுத்தியிருக்கிறது.
அதனை ஏற்று அதிமுக வேட்பாளர்களும் செலவிற்காக எடுத்து வைத்த பணத்தை முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் அதிமுக மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜூவிடம் கணக்கு காட்டியுள்ளனர். அவரும் தேர்தல் வேலைகள் படுஜோராக நடக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்த அதிமுகவினர், நிலைமை தங்களுக்கு சாதகமாக இல்லை என்று புரிந்து கொண்டுள்ளனராம்.
உடனே எடுத்து வந்த பணத்தை ஏன் வாரி இறைக்க வேண்டும்? ஓரளவு மட்டும் செலவு செய்வோம் என்ற எண்ணத்தில் இருந்துள்ளனர். இதனால் ஒருசில அதிமுக வேட்பாளர்களை தவிர மற்றவர்கள் கரன்சி விஷயத்தில் அடக்கியே வாசித்துள்ளனர். இதுபற்றி மதுரை மாவட்ட அதிமுக தலைமைக்கும், கட்சி தலைமைக்கும் தகவல் சென்றுள்ளது. இதனால் அவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
கரன்சி விஷயத்தில் தாராளமாக செயல்பட்டிருந்தால் எப்படியும் வெற்றி வாகை சூடியிருக்கலாம் என்று புலம்பல்கள் கேட்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. எனவே மதுரை மாநகராட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றி என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டதா? என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். என்ன அவசரம்? இன்னும் ஒருநாளில் ஒட்டுமொத்தமாக முடிவுகள் வெளியாகிவிடும். அதன்பிறகு யார் எப்படி வேலை பார்த்தார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும் என்கின்றனர்.