மத்திய அரசின் அறிவுரை அடிப்படையிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தியை விமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் வீதிகளில் சிலை வைத்தும், பொதுமக்கள் ஒன்று கூடி விநாயகர் சிலையுடன் ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்று அந்தந்த மாநில அரசு அறிவுறுத்தியுள்ளன. தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள், பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு, “விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. மத்திய அரசின் அறிவுரை அடிப்படையிலே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு சுட்டிக்காட்டியதால் ஊர்வலம், கூட்டமாக சேர்ந்து கொண்டாட தடை விதித்துள்ளோம்” என்று பதிலளித்தார்.