• Sun. May 18th, 2025

என்ன.. மருத்துவமனையிலும் ஒற்றைத் தலைமையா..?

Byவிஷா

Jun 27, 2022

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாள்தோறும் சூட்டைக் கிளப்பி வரும் நிலையில், அரசு தலைமை மருத்துவமனையிலும் ஒற்றைத் தலைமை விவகாரம் கிளம்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் கரூர் மாநகரில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு கொண்டிருப்பதால், எனவே குளித்தலையில் தான் அரசு தலைமை மருத்துவமனை அமையும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். இதனால் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
இந்த சூழலில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய குளித்தலை தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.மாணிக்கம், குளித்தலையில் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை கரூருக்கு சென்றுவிட்டதாக தவறாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அது உண்மை இல்லை. மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார்.
மேற்குறிப்பிட்ட மூன்று பேரின் பேச்சுகளும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. இப்படி மாற்றி, மாற்றி பேசுவதால் கொந்தளித்த அரசியல் கட்சிகள் இன்றைய தினம் (ஜூன் 27) அதிரடியான போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அதாவது, குளித்தலை பகுதி மக்களுக்கு இணையும் வேண்டாம்… துணையும் வேண்டாம்… ஒற்றை தலைமை மருத்துவமனையே வேண்டும்.
குளித்தலை அரசு மருத்துவமனையை தமிழக அரசின் அரசாணையின் படி, கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செயல்பட வலியுறுத்தி குளித்தலை அரசு மருத்துவமனை முகப்பில் ”கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை – குளித்தலை” என்ற பெயர் பலகை அமைக்கும் போராட்டம் நடைபெறவுள்ளது. சரியாக காலை 9.30 மணிக்கு போராட்டம் தொடங்குகிறது.
இதில் இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தளபதி விஜய் மக்கள் இயக்கம், எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசு தலைமை மருத்துவமனை விவகாரத்திலும் ஒற்றை தலைமை தலை தூக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.