உள்நாட்டுப் போரில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் மக்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்வதற்காக, தலிபான்களுடன் இந்திய அரசு அதிகாரிகள் பேசி வருகின்றார்களா.
உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் ஏதும் உள்ளதா என்ற கேள்விகளை மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழுப்பினார். இதற்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் அளித்த விளக்கத்தில், ‘ஆப்கன் மக்களுடன் கொண்டுள்ள உறவுகள் மற்றும் ஐ.நா மன்றத்தின் பாதுகாப்பு சபை தீர்மானம் 2593 ஆகியவை, அந்த நாட்டுடன், இந்தியா மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைக்கு வழிகாட்டும்.
அதன்படி, 50000 மெட்ரிக் டன் கோதுமை, உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் கோவிட் தடுப்பு மருந்துகளை, மனிதாபிமான அடிப்படையில், ஐநா மன்றத்தின் சார்பு நிறுவனங்களுடன் இணைந்து, ஆப்கன் மக்களுக்கு வழங்குவதற்கு இந்தியா உறுதி அளித்து இருக்கின்றது’ என தெரிவித்தார்.