உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்திற்க்கு துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் வருகையை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம். இந்த போராட்டம் எதிர்பாராத விதமாக வன்முறையாக மாறியது.
இதில் அமைச்சர் மிஸ்ராவின் கார் ஏறி இறங்கியதில் 3 விவசாயிகள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வன்முறையில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினரைப் பார்த்து ஆறுதல் தெரிவிக்க வரும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் துணை முதல்வர் இருவரின் விமானத்தையும் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கக் கூடாது என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டது.
மேலும், பலியானவர்களின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த நிர்வாகி தீபேந்தர் ஹூடா உள்ளிட்ட பலர் லக்கிம்பூருக்கு நேற்று இரவு சென்றனர்.
ஆனால், பிரியங்கா காந்தி சென்ற வாகனத்தை சீதாப்பூர் பகுதியிலேயே தடுத்து நிறுத்திய போலீஸார், அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். கைது செய்ய வந்தபோது போலீஸாருடன் பிரியங்கா காந்தி வாக்குவாதம் செய்த வீடியோவை வெளியாகி பேசு பொருளான நிலையில், தான் தங்க வைக்கப்பட்டிருக்கும் அறையைத் தானே சுத்தம் செய்யும் பிரியங்காவின் காணொளி வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.