• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

தேனியில் களையிழந்த ‘புளி கொட்ரை’ தொழில்: பல ஆயிரம் பெண்கள் வேலையிழப்பு

தேனி மாவட்டத்தில் களையிழந்து வரும் ‘புளி கொட்ரை’ குடிசை தொழிலால் பல ஆயிரம் பெண்கள் வேலையிழந்து தவிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஒரு காலத்தில் ‘புளி கொட்ரை’ எனப்படும் குடிசை தொழில் களை கட்டியது. இதனால் தேனி. கம்பம், போடி, சின்னமனூர், உத்தமபாளையம், பெரியகுளம், ஆண்டிபட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பெண்கள் சுறுசுறுப்புடன் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பல ஆயிரம் குடும்ப பெண்கள் சத்தமில்லாமல் வருவாய் ஈட்டி வந்தனர். இதற்கு முழு காரணம் அப்போது, மதுரை-தேனி, தேனி-கம்பம், தேனி-போடி, தேனி-பெரியகுளம் மெயின் ரோட்டின் இரு புறங்களிலும் குடை போல் அகன்று விரிந்து, கண்ணுக்கெட்டுன துாரம் வரை வானுயர்ந்த புளியமரங்கள் அணிவகுத்து இருந்தன.

இதனால் புளி வரத்தும் அதிகம் காணப்பட்டன. பல ஆயிரம் குடும்ப பெண்கள் வீட்டில் இருந்தபடியே, புளியை தட்டி சுத்தம் செய்து, பாக்கெட் போட்டு கொடுத்தனர். இதன் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 200 முதல் 300 ரூபாய் வரை சம்பாதித்தனர். இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு காணப்பட்டது. காலப்போக்கில், ரோடு விஸ்தரிப்பு காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற மரங்கள் அடியோடு அழிந்து போயின. அதோடு ‘புளி கொட்ரை’ எனப்படும் குடிசை தொழிலும் நாளுக்கு நாள் நலிவடைந்து வந்தது.

தேனியை சேர்ந்த மாரியம்மாள் 62, கூறுகையில், கடந்த 30 வருடத்திற்கும் மேலாக புளி தட்டி வருகிறேன். இத்தொழிலை தவிர வேறு வேலை தெரியாது. இத்தொழில் பல பெண்களை வாழவைத்தது, தற்போது புளி தட்டுதலில் ஆர்வம் குறைந்து விட்டது. ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநில புளி மட்டுமே வருகிறது. 100 பேர் வேலை செய்த இடத்தில் 10 பேர் கூட இல்லை. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இத்தொழில் முற்றிலும் அழிந்துவிடும்” என்றார்.